காடையாம்பட்டி அருகே அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் மனைவி யசோதா வசித்து வருகிறார். இவருக்கு கௌசிகா (14) என்ற மகள் உள்ளார். இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த முருகன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மாணவி தாய் யசோதா கூலி வேலைக்குச் சென்று தனது மகள் கௌசிகாவை வளர்த்து வந்தார்.
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட யசோதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் வீட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக மாணவி கௌசிகா பாட்டி வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்று வந்தார்.
இந்தநிலையில், கௌசிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளி மாணவி, ஒரு துண்டு சீட்டில் இறப்பதற்கான காரணம் குறித்து தனது செல்போனில் பேசி வைத்துள்ளதாகவும், இந்த செல்போனின் பாஸ்வேர்டு எண்ணையும் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்.
அவரது செல்போனில் பதிவில்... என் பெயர் கௌசிகா என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் அல்ல, எனது அம்மா என்னால் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து தான் இந்த முடிவு எடுக்கிறேன். என்னை மன்னித்து விடு அம்மா என உருக்கமாக பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியிலும், மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/146840/Forgive-me-mother-the-tragic-decision-taken-by-a-schoolgirl-after-posting-it-on-her-cell-phone.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post