சரிவர படிக்காத மகனை கண்டித்த தாயை அவர் தூங்கிக் கொண்டிருந்த போது தலையில் கல்லை போட்டு 14 வயது மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். சிவில் காண்ட்ராக்டரான இவருக்கு யுவராணி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும், தர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சஞ்சய் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், பள்ளியில் சரிவர படிக்காத சஞ்சயை அவரது தாய் யுவராணி கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்த சஞ்சயை அவரது தாய் தந்தை கண்டித்து வந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நள்ளிரவில் வீட்டில் யுவராணி, மகன் சஞ்சய், மகள் தர்ஷினி ஸ்ரீ மூன்று பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சஞ்சய், தாய் மீது இருந்த ஆத்திரத்தில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல்லை எடுத்துவந்து தூங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலையில் போட்டுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது அவரது மகள் தர்ஷினி ஸ்ரீ சத்தம் போடவே சஞ்சய் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானார். இது குறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் மற்றும் சத்தியமங்கலம் டிஎஸ்பி சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சிறுவன் சஞ்சயை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 14 வயது சிறுவன் தனது தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/149053/Sathyamangalam-What-happened-to-the-mother-who-scolded-her-son-for-not-studying-properly.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post