தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீது 4 வாரத்தில் பதிலளிக்க ஆன்லைன் ரம்மி & விளையாட்டு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தது. அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் விசாரித்தது.
அந்த விசாரணையின்போது, “தமிழக அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது எதிர்மனுதாரர்களான ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜல்லிகட்டு விளையாட்டிலும் மரணம் நிகழ்கிறது. ஆனால் அதற்கு சட்டம் இயற்றி ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணமும் தெரிவிக்கப்படவில்லை” என வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், “இந்த விளையாட்டால் பல பேர் ஏமாந்து போயுள்ளனர். விரக்தியில் பலர் உயிரை மாய்த்துள்ளனர். எனவே பொது நலனை கருதியே தடை சட்டம் இயற்றபட்டது” என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், “போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது; உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது” என தெரிவித்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தது. இவையாவும், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி நடந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக நவம்பர் 2021-ல், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள அனிருத் போஸ் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டு நிறுவனங்ள் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் நோட்டீஸ்க்கு பதில் அளித்தவுடன் தமிழக அரசு தரப்பில் பதில் மனுவை 2 வாரத்தில் தாக்கல் செய்யுமாறும், வழக்கை பத்து வாரங்களுக்கு பிறகு மீண்டும் பட்டியலிடப்படுமாறும் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/146913/Has-the-Supreme-Court-accepted-the-Tamil-Nadu-government-s-request-to-ban-online-rummy.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post